சிவ சிவ உன் கோபம்
ருத்ரதாண்டவம்
பூமித்தாய்க்கு
பூகம்பம்
அக்னி தேவனால் கும்பகோணம்
துன்பகோனம்...
என் அழகிய அலைமகளும்
பெயர்சூட்டிக் கொண்டாள் சுனாமி...என்று
கடல் அன்னையே
அலைமகளே - உன்
மெல்லிய இசை கேட்ட
இடங்களில் உன்
குழந்தைகளின் அழுகுரல்
உப்பிட்டு வளர்த்தவளே
உயிர்குடிக்க
நினைத்தது
நியாயமா ? ? ?
அலைமகளே - உனை
தோழனென்றவனை
ஏமாற்றியது
எவ்வகை ? ? ?
புத்தாண்டை சோகமாக்கியவளே
பேராழியே !
பேரழிவை தந்தவளே
உன்னால் மகிழ்த்த வந்த
பண்டிகைகளெல்லாம்
துன்பமானதே...
உன் கரையோர
மணலின் ஈரம் - உன்
நெஞ்சில் இல்லையா ? ? ?
பற்பல பொருள்
தந்தவளே அதற்கு
விலை
எம் மானுடர் உயிரோ ? ? ?
கவலை மறந்து
உனை இரசித்தவனை
ருசிக்க நினைத்தது
நியாயமா ? ? ?
கரையை மட்டும்
தழுவியவளே
மனிதஉயிரைத்தழுவியது ஏன் ? ? ?
இலட்சியங்களை
பகிரவந்த நண்பனையும்
அன்னை மடியென
ஆடிய குழந்தைகளையும்
உன் கோரப்பசிக்கு
இரையாக்கினாயே !
ஊருக்கு ஒரு இடுகாடு
உன் தாண்டவத்தால்
ஊரே இடுகாடு...
எத்தனை யுகங்கள் காத்திருந்தாய் தாயே.? ? ?
உன்னில்
உவர்ப்பு தன்மை
குறைந்ததென்றெண்ணி
எம் கண்ணீரின் உவர்ப்பைப்பெற
இத்தாண்டவமா ? ? ?
இல்லை
அன்னையே என்றழைத்த
குழந்தையை வாரி அணைத்திட
நினைத்த பாசத்தின்
உச்ச நிலையா ? ??
உன் பேரலையை
எம் பேரிழப்பைப்
பார்த்த கண்கள் சொரிந்த
கண்ணீரின் ஆழம்
ஆழியே ...
உன் ஆழத்தினும் அதிகம்
அன்னையே - உன்
பசியாற்றிய
குழந்தைகளுக்காக
இனி வாழும்
குழந்தைகைள
வாழவிடு தாயே
வாழவிடு