Thursday, April 17, 2008

தண்ணீர்த் தாண்டவம்

சிவ சிவ உன் கோபம்

ருத்ரதாண்டவம்

பூமித்தாய்க்கு

பூகம்பம்

அக்னி தேவனால் கும்பகோணம்

துன்பகோனம்...

என் அழகிய அலைமகளும்

பெயர்சூட்டிக் கொண்டாள்

சுனாமி...என்று

கடல் அன்னையே

அலைமகளே - உன்

மெல்லிய இசை கேட்ட

இடங்களில் உன்

குழந்தைகளின் அழுகுரல்

உப்பிட்டு வளர்த்தவளே

உயிர்குடிக்க

நினைத்தது

நியாயமா ? ? ?

அலைமகளே - உனை

தோழனென்றவனை

ஏமாற்றியது

எவ்வகை ? ? ?

புத்தாண்டை சோகமாக்கியவளே

பேராழியே !

பேரழிவை தந்தவளே

உன்னால் மகிழ்த்த வந்த

பண்டிகைகளெல்லாம்

துன்பமானதே...

உன் கரையோர

மணலின் ஈரம் - உன்

நெஞ்சில் இல்லையா ? ? ?

பற்பல பொருள்

தந்தவளே அதற்கு

விலை

எம் மானுடர் உயிரோ ? ? ?

கவலை மறந்து

உனை இரசித்தவனை

ருசிக்க நினைத்தது

நியாயமா ? ? ?

கரையை மட்டும்

தழுவியவளே

மனிதஉயிரைத்தழுவியது ஏன் ? ? ?

இலட்சியங்களை

பகிரவந்த நண்பனையும்

அன்னை மடியென

ஆடிய குழந்தைகளையும்

உன் கோரப்பசிக்கு

இரையாக்கினாயே !

ஊருக்கு ஒரு இடுகாடு

உன் தாண்டவத்தால்

ஊரே இடுகாடு...

எத்தனை யுகங்கள் காத்திருந்தாய் தாயே.? ? ?

உன்னில்

உவர்ப்பு தன்மை

குறைந்ததென்றெண்ணி

எம் கண்ணீரின் உவர்ப்பைப்பெற

இத்தாண்டவமா ? ? ?

இல்லை

அன்னையே என்றழைத்த

குழந்தையை வாரி அணைத்திட

நினைத்த பாசத்தின்

உச்ச நிலையா ? ??

உன் பேரலையை

எம் பேரிழப்பைப்

பார்த்த கண்கள் சொரிந்த

கண்ணீரின் ஆழம்

ஆழியே ...

உன் ஆழத்தினும் அதிகம்

அன்னையே - உன்

பசியாற்றிய

குழந்தைகளுக்காக

இனி வாழும்

குழந்தைகைள

வாழவிடு தாயே

வாழவிடு