Tuesday, April 15, 2008

அறிவியல் காற்றின் ஆயுளே...

அறிவியல் காற்றில்
தோய்ந்து
பூமிதனில் சொர்க்கத்தைப்புலரவைக்கும்
அறிவியல் அறிஞன்
அப்துல் கலாமே
உமக்கு
நூறு கோடி மக்களின் சலாம் !. . .

தென்கோடியில் அவதரித்தாய்
சந்தர்ப்பத்திற்காய் காத்திராமல்
சந்தர்ப்பங்களை உருவாக்கி
சோதனையிலும்
சாதனனை படைத்திட்ட
முதல்வனே...

வறுமை வாட்டி வதைத்தாலும்
நந்தி கருவிலே அழிந்தாலும் - உன்
நம்பிக்கை அழியவில்லை
ராட்டோ கைவிடப்பட்டாலும்
ரணத்தை மனதில் ஏற்காத
மாணிக்கமே...

அக்னி சிறகுகள்
தரித்த
விஞ்ஞான சாம்ராஜ்ஜியத்தின்
மன்னரே. . .
கனவுகளில் வாழ்வதைவிட
கனவுகளால் வாழ வழி தந்த
இந்தியாவின் இமயமே
இளைஞர்களின் இதயமே

சிரசை சிந்தனையால்
செவிகளைக் கேள்விஞானத்தால்
தழ்களைப் புன்னகையால்
ஈர்க்கும் விழிதனைக் கருணையால்
அலங்கரித்த
தெய்வீக அழகனே !

உன் . . .
இலட்சியங்கள் தடைப்பட்டாலும்
இடிபாடுகளக்குள்ளே
பொன்னான வாய்ப்புத் தேடி
மண்ணுக்கும் விண்ணுக்கும்
ஏவுகணை பாலம் அமைத்த அக்னிக்குஞ்சே !
இனிமையின் இலக்கணமே
எளிமையின் எழில் குன்றே

புன்சிரிப்பின் பூர்வீகமே
பொன்னுலகின் பகலவனே
பொறுமையின் பொற்பாதமே . . .
நாளிதழ்களின் நாயகனே !
நாளைய பிரபஞ்சத்தின் கருவறையே !
தோல்வியெனும் பாகற்காயில்
வெற்றியெனும்
பஞ்சாமிர்தம் படைக்கும் கலைஞனே !
சாதிபேதம் ஒழிந்திட . . .
சமத்துவம் நிறைந்திட
மனிதநேயம் மலர்ந்திட
அன்பு நெறி காட்டி
இன்ப நிலை கூட்டி
துன்பநிலை கழித்து
நம்பிக்கை தீபமேந்தி
நீ நடக்கிறாய்
இதோ
என் கண் முன்னே
எதிர்கால பாரதம் தெரிகிறது - ஆம்
புதுபாரதம் புத்துயிர் பெறுகிறது...