நான்
எதுகை,மோனை,யாப்பை
நினைந்து
அறைக்குள் அடங்கி
இருளில் துயின்றவனைத்
தட்டி எழுப்பிய
கொட்டுமுரசு
தமிழுக்கும்
வாழ்வியலுக்கும்
புதுப்பரிணாமம் . . .
பளிச்சிடும் கருத்துமின்னல்
சிந்தனைத்துளிகளின் பெருமழை...
சொற்சித்திரங்களின்
சுந்தரச்சோலை
பசி வந்த கிளிகளெல்லாம்
பறந்து வரும்
சுதந்திரச்சோலை...
கன்னித்தமிழுக்கு எழில்
மானிடப்பண்புகளுக்கு
கருத்தாழமிக்க உரம்
சிந்தனைகளின் பிம்பம்
இதயத்துடிப்பின் மருந்துச்சீட்டு
இதய உணர்வுகளை
வாழ்க்கை நிகழ்வுகளை
உணர்ச்சி பொங்கக் கூறிடும்
எரிமலை...
பனிமலை...
மனிதனே,
நான் - உன்
வானவில் எண்ணங்களுக்கு
வண்ணம் பூசிடும்
மாயாஜால மந்திரவாதி
தன்னம்பிக்கையின்
இயங்குசக்தி
மக்கள் விழிப்புணர்வுக்கு
முதல் முகவரி...
சிப்பிகளில்லா முத்து
என்,
கருத்துக் களஞ்சியம்
தேசிய விருதுக்கும் வழிகாட்டி...
என் வளர்ச்சி
ஹைகூவின் பிறப்பு
நெற்றிக்கு திலகம்
வில்லுக்கு விசயன்
சொல்லுக்கு அநுமன்
பாட்டுக்குப்புதுக்கவிதை
நான்
புதுக்கவிதை
புது(க)விதை
வழிகாட்டி . . .